குணமா? பணமா? பகுதி 2 - சுவாரஸ்யமான தமிழ் சிறுகதை (Gunama Panama Part 2)
பணிப் பெண்ணின் பணிவு :
'மேடம், சிரமத்திற்கு வருந்துகிறோம். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். விமானம் புறப்பட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது' என்றாள் பணிப்பெண்.
'பொறுத்துக் கொள்ள வேண்டுமா? நானா? என்னைப் பொறுத்துக் கொள்ளும் படி வலியுறுத்த நீ யார்? என்றாள் ராணி. பணிப்பெண், 'சரி உங்களுக்கு என்ன தான் வேண்டும் ? என்ன செய்தால் விமானம் புறப்பட அனுமதிப்பீர்கள்?' என உபாயம் கேட்டாள்.
உடனே, 'இந்த முதியவரை வேறிடத்திற்கு மாற்றங்கள். அப்போதுதான் நான் மகிழ்ச்சியாகப் பயணம் மேற்கொள்ள இயலும்' எனக் கர்வத்தோடு கூறினாள் ராணி.
இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு பரிதாபமாக அமர்ந்திருந்த அந்தப் பெரியவர், மிகுந்த மனவேதனை அடைந்தார். மற்ற பயணிகள் அனைவரும் அவரின் நிலை கண்டு கருணை கொண்டனர். ஆனால், யாரும் அந்தப் பெண்ணின் அருகில் அமரத் தயாராக இல்லை.
பணிப்பெண் செய்வதறியாது நின்றாள். மீண்டும் ஒருமுறை ராணியிடம், 'மேடம், விமானத்தில் எந்த ஒரு இருக்கையும் காலியாக இல்லை. அவரை வேறு எங்கும் மாற்ற இயலாது. பிற பயணிகள் யாரும் மாற்றிக் கொள்ள முன்வரவில்லை. விமானம் புறப்பட வேண்டிய நேரம் வேறு கடந்து விட்டது. உங்களைக் கெஞ்சி கேட்கிறேன், சற்று நேரம் பொறுத்து கொள்ளுங்களேன்' என்று தன்னால் இயன்ற முயற்சி செய்தாள்.
ராணிக்கு தான் இறங்கி வந்து பழக்கமே இல்லையே. 'விமானம் புறப்பட வேண்டிய நேரம் கடந்தால், அது உங்கள் பிரச்சனை. என் பிரச்சனைக்கு முதலில் ஒரு தீர்வு கூறிவிட்டு, உங்கள் பிரச்சனையைப் பார்த்துக்கொள்ளுங்கள். அதுவரை விமானத்தை எடுக்க ஒப்புக்கொள்ளமாட்டேன்' என்று நேரத்தை மேலும் கடத்தினாள் ராணி.
ஓட்டுநரின் முயற்சி :
தனது கடைசி நம்பிக்கையான விமான ஓட்டுநரைத் தேடிச் சென்றாள் பணிப்பெண். நிகழ்ந்தவை அனைத்தையும் ஓட்டுநரிடம் எடுத்துரைத்தாள். 'நான் ஒருமுறை முயற்சிக்கிறேன்' என்று ராணியிடம் வந்தார் ஒட்டுநர். 'முதியவர்களை இழிவாக நடத்துவது முறையல்ல. பொது விமானத்தில் ஏறிக் கொண்டு இவ்வாறு வாதம் செய்வது நல்லதல்ல. விமானத்தை எடுக்க ஒத்துழையுங்கள்' என்று சினத்தை வெளிப்படுத்தாமல் பொறுமையாகக் கூறினார்.
பொங்கி எழுந்த பெரியவர் :
'அந்தப் பெரியவரை இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றியபின் விமானம் புறப்படலாம்' எனப் பிடிவாதம் செய்தாள். பெரியவர் மனம் நொந்து போனது. அவ்வளவு நேரம் பொறுமை காத்த பெரியவர், தற்போது பேசத் தொடங்கினார்.
தன் இருக்கையிலிருந்து எழுந்த பெரியவர், 'என்னால் தங்கள் அனைவரின் பயணத்திற்கும் தடங்கல் ஏற்பட்டுள்ளதற்கு வருந்துகிறேன். அனைவரிடமும் மன்னிப்பு வேண்டுகிறேன். நான் இங்கிருந்து சென்று விடுகிறேன். அடுத்த விமானத்தில் பயணம் செய்து கொள்வேன். நீங்கள் யாரும் வருந்தத் தேவையில்லை. எனக்கு எந்த ஒரு முக்கியமான பணியும் இல்லை. எனது மகனைக் காண தான் செல்கிறேன்' என்று தன் மனவேதனை மறைத்துக் கொண்டு பேசினார்.
ராணி, 'இந்த முடிவை நீங்கள் முதலிலேயே எடுத்து இருந்தால், இவ்வளவு நேரம் தாமதமாகி இருக்காது. உங்களால் அனைவருக்கும் கஷ்டம், வேகமாகப் புறப்படுங்கள். எனக்கு நேரமாகிறது விரைவாக அந்த ஊருக்குச் சென்று அடைய வேண்டும்' என்றாள். [ரொம்ப ஓவரா தான் போகிறாள் அந்தப் பெண். அவளுக்கான தக்க பதிலடி காத்துக் கொண்டிருக்கிறது]
பயணிகள் அனைவரின் கண்களிலும் ராணி மீது வெறுப்பின் தீக்கொழுந்து கொண்டு எரிந்தது. ஆனால், எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பெரியவர் தன் பையை எடுத்துக்கொண்டு விமானத்தின் வாசலை நோக்கி நடந்தார்.
சட்டென்று ஒருவர் அவரின் கையைப் பிடித்தார். 'பெரியவரே! தாங்கள் செல்ல வேண்டிய இடம் விமானத்திற்கு வெளியே அல்ல, முதல் வகுப்பில் உள்ள எனது இருக்கைக்கு' என்றார் ஒரு நடுத்தர வயது உடைய ஆண்.
கதையின் கதாநாயகன் :
விமானத்தின் ஓட்டுநர், பணிப்பெண், பயணிகள் என அனைவர் கண்களுக்கும் கதாநாயகனாகத் தெரிந்தார் அவர். உணர்ச்சி மிகுதியால் விமானத்தில் ராணியை தவிர அனைவரும், அவருக்கு மகிழ்ச்சியுடன் கைத்தட்ட ஆரம்பித்தனர்.
ஓட்டுநர் அவரிடம் வந்து, 'நீங்கள் தான் உலகின் சிறந்த பணக்காரர்களில் ஒருவர் அல்லவா? தாம் ஏன் இருக்கையை விட்டுக் கொடுத்தீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு அந்தப் பணக்காரர், 'ஆம் நண்பா! நடந்தவை அனைத்தையும் பணிப்பெண் உங்களிடம் கூறுவதை கேட்டேன். என்ன நடக்கிறது இங்கே என்று பார்க்கப் பின் தொடர்ந்து வந்தேன். எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை, நான் அவர் இருக்கையில் அமர்ந்து கொள்கிறேன்' என்றார்.
பெரியவர் அவரை மகிழ்ச்சியுடன் ஆசிர்வதித்தார், பின் பணக்காரரின் முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்துகொண்டார். பணக்காரர் இரண்டாம் வகுப்பில் ராணியோடு அமர்ந்தார். விமானம் புறப்பட்டது.
ராணி பேசத் தொடங்கினாள், 'உலகப் பணக்காரர்களில் ஒருவரா நீங்கள்? நான் ராணி. உங்கள் அளவிற்கு இல்லை என்றாலும், எங்கள் குடும்பமும் செல்வந்தர்கள் தான். தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி' என்று கைக் குலுக்க தன் கையை நீட்டினாள்.
'அந்த இருக்கையை மதிப்புமிக்கவர்களுக்கே அளிக்க எண்ணினேன். உங்களுக்கு அந்தத் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை' என்று கூறியப்படி உறங்கச் சென்றார். ராணிக்கு கன்னத்தில் அறைந்தது போல இருந்தது. பேச வார்த்தைகளின்றி அவமானத்தோடு ஜன்னல் பக்கம் திரும்பிவிட்டாள்.

கருத்துகள்
கருத்துரையிடுக