கோபத்தால் என்ன இலாபம் ? | சுவராஸ்யமான தமிழ் சிறுகதை

நண்பர்களே! மீண்டும் ஒரு சுவையான கதையோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

கோபத்தால் என்ன இலாபம் ? | சுவராஸ்யமான தமிழ் சிறுகதை

மனோவின் முயற்சி :

மனோகரன் கடுமையான சினம் கொண்டவன். எவர் சொல்லுக்கும் செவிசாய்க்காமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று வாதம் செய்பவன். ஆனால், இன்று ஆழ்ந்த மௌனமும் பொறுமையும் கொண்டிருந்தான்.

அவன் இதயம் வேகமாகத் துடித்தது. பரபரப்பான சாலையில் ஏதோ ஒரு யோசனையோடு வேகமாக நடந்து கொண்டிருந்தான். அவன் கண்களில் ஒரு ஏக்கம் தெரிந்தது. நேராக ஒரு வீட்டின் வாசலில் நின்றான், 'குணா குணா' என்று வெளியே கத்தியபடி, உள்ளே வர அனுமதி எதிர்பார்த்து காத்திருந்தான்.

அந்த வீட்டின் கதவு திறந்தது. ஒரு அம்மா வெளியே வந்தார், 'நீங்கள் மனோகரன் தானே? உங்கள் நண்பர் குணாவின் மனைவி நான். அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்று உள்ளார்' என்றார்.

'எப்பொழுது திரும்பி வருவார்?' என்று ஒருவித பதற்றத்தோடு கேட்டான் மனோகரன். 'அதை என்னிடம் சரியாகச் சொல்லவில்லை. அவர் வந்ததும் உங்களைக் கைபேசியில் தொடர்பு கொள்ள சொல்கிறேன்' என்றபடி வீட்டிற்குள் சென்று கதவை மூட முற்பட்டாள்.

'இல்லை அம்மா, நான்....' என்று மனோ முடிப்பதற்குள், கதவு மூடப்பட்டு விட்டது. மனோ தனது தலையைத் தொங்கப் போட்ட படி, அடுத்த வீட்டை நோக்கி நடந்தான்.

ஒரு பெரிய பங்களாவின் வாசலில் நின்றான். அங்கே ஒரு சின்னக் குழந்தை வீட்டின் முன் இருந்த காலி இடத்தில் பந்தோடு விளையாடிக் கொண்டிருந்தது.

மனோ சற்று தயக்கத்தோடு வெளி வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். அதைக்கண்ட குழந்தை பந்தை அங்கேயே போட்டு விட்டு, 'அம்மா அம்மா' என்று உள்ளே ஓடியது. குழந்தையின் சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மா மனோவை கண்டார்.

'நான் மனோ கோபாலின் நண்பன். ரொம்ப கஷ்டம் ஒரு உதவி வேண்டும். கோபாலை பார்க்க வேண்டும்' என்று தயங்கிக் கொண்டே கூறினான். 'ஒரு நிமிடம் காத்திருங்கள், அவரை அழைத்து வருகிறேன்' என்று உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்.

'அவருக்கு முக்கியமான வேலை உள்ளதாம். உங்களை வேறொரு நாள் வரச் சொன்னார்' என்று கூறிவிட்டு, 'எப்பொழுதும் வெளியே விளையாடிக் கொண்டு' என்று வெளியே வந்து வேடிக்கை பார்த்த குழந்தையையும் உள்ளே அழைத்துச் சென்று கதவைச் சாத்திக் கொண்டார்.

மருத்துவமனையிலிருந்து அழைப்பு :

மனோ வாயடைத்து போனான். கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மனமுடைந்து வீட்டின் வெளியே சாலை ஓரம் அமர்ந்தான்.

'எல்லாம் என் தவறு தான் உன்னை நான் எப்படி காப்பாற்ற போறேன் எனக்குத் தெரியவில்லை. 1௦,000 ரூபாய்க்கு எங்கே போவேன்? கடவுளே எனக்குத் தண்டனை தா, என் மனைவியை எப்படியாவது காப்பாற்று' என்று கதறினான்.

சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அவனை வினோதமாகப் பார்த்தனர். சற்று ஒதுங்கி நடந்தனர்.

சட்டென மனோவின் கைபேசி ஒலி எழுப்பியது, 'ஹலோ சார், நீங்க மனோகரன் தானே? டாக்டர் எங்களைத் திட்றாங்க. சீக்கிரமே உங்கள் மனைவியை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் சென்று 2 மணி நேரம் ஆயிடுச்சு, இன்னும் நீங்களும் வரவில்லை வேறு யாரும் பணமும் கொண்டு வரவில்லை. வேகமாக வாங்க, உங்கள் மனைவி மயக்கம் இன்னும் தெளியவில்லை. அப்புறம் எதாவது ஆயிடுச்சின்னா, எங்களுக்குத் தான் பிரச்சனை' என்றாள் ஒரு பெண்.

'மேடம், உங்களைக் கெஞ்சி கேட்கிறேன். அவளைப் பத்திரமாகப் பார்த்துக்கோங்க. இன்னும் அரை மணிநேரத்துல வந்துடறேன்' என்றபடி மருத்துவமனைக்கு விரைந்தார் மனோ. நேராக அவன் மனைவி இருந்த அறைக்குச் சென்றான்.

மனைவியின் நிலை:

அவள் தலையைக் கோதிக்கொண்டு, 'என்னை மன்னித்துவிடு மஞ்சுளா. நான் புத்திகெட்டு உன்னை அடித்து விட்டேன். இனி எப்பொழுதும் இந்தத் தவறை செய்யமாட்டேன். உன் தலையில் அடிபட்டு இன்னும் நினைவு திரும்பாமல் இருக்க, இந்தப் பாவி தானே காரணம்' என்று கண்ணீர் வடித்தான். கையில் இருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. உன் சிகிச்சையைத் தொடர, மேலும் 1௦,௦௦௦ ரூபாய் தேவையாம். என் முரட்டு கோபத்தால் அனைத்து நண்பர்களையும் நான் காயப்படுத்தி உள்ளேன். எனவே, இன்று யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. என்ன தான் நான் செய்ய? பணத்தை கட்ட இன்றே கடைசிநாள்' என்று தேம்பினான்.

'என் கோபம் அனைத்தையும் தாங்கிக்கொண்டு என்னோடு எப்படி காலத்தை ஓட்டினாய். எனது குணத்தால் என் உயிர் நண்பர்களும் என்னைக் கைவிட்டனர். இறைவா! என் மனைவியை மீட்டுத் தந்தால் இன்றோடு என் குணத்தை மாற்றிக் கொள்கிறேன்' என்று உரக்க கத்தினான்.

'இப்படி கத்தாதீங்க சார். இது மருத்துவமனை. நீங்கள் பணம் செலுத்த அளிக்கப்பட்ட நேரம் முடிந்தது. மனைவியைத் தூக்கிக் கொண்டு புறப்படுங்கள்' என்றார் ஒரு செவிலியர்.

கடவுளின் கருணை :

கண்களில் நீர் பெருக தன் மனைவியைத் தூக்கினான் மனோ. அவன் கைக்கு ஏதோ தட்டுபட்டது. அவன் மனைவியின் இடுப்பில் ஒரு பை முடிப்பு இருப்பதை கவனித்தான். அவளைக் கீழே இறக்கி முடிப்பை திறந்தான்.

உள்ளே பணம்! அதில் 2000 ரூபாய் நோட்டுகள் பல இருந்தன. அதைக் கண்டு அதிர்ச்சியும் பெரும் மகிழ்ச்சியும் அடைந்தான். அந்தப் பணத்தை சிகிச்சைக்குப் பயன்படுத்தினான்.

இரவு தன் மனைவியின் கையைப் பற்றிக்கொண்டு அமர்ந்தபடியே தூங்கினான். 'என்னங்க... என்ன ஆச்சு?' என்று குரல். ஆச்சரியத்தோடு கண்விழித்தான் மனோ. 'எழுந்துட்டியா நீ? என்ன ரொம்ப பயம் கொள்ள செய்துவிட்டாயடி நீ?' என்று ஆனந்த கண்ணீரோடு அவளை அணைத்துக்கொண்டான்.

'ஆமாம், அந்தப் பணம்.....? நீ இடுப்பில் வைத்திருந்த பண முடிப்பை பார்த்தேன். எப்படி அவ்வளவு பணம் உன்னிடம்?' என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.

'அதுவாங்க, உங்களைக் கல்யாணம் செய்யும்பொழுது, என் அம்மா நீங்கள் கோபப்பட்டால் திரும்பிக் கோபப்படக் கூடாது, அதுக்கு பதில் 5 ரூபாயை இந்தப் பையில் போட வேண்டும் என்று கூறி, இந்தப் பையைக் கொடுத்தாங்க. அப்படி சேர்த்த காசு தான் இது' என்று தயங்கியபடி கூறினாள்.

மீண்டும் கோபத்தில் தன்னை திட்டி விடுவாரோ என்ற பயம் அவள் உள்ளே உறைந்திருந்தது. ஆனால், அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக மனோ, 'அவ்வளவு சண்டை போட்டுவிட்டேனா நான் உன்னோடு? இனி, உன் கணவனின் வேறொரு முகத்தைக் காண்பாய்' என்று சிரித்தபடி கூறினான். தன் மனைவியைக் காப்பாற்றிக் கொடுத்த கடவுளுக்கு மனதார நன்றி கூறினான் மனோ.

பிற சுவாரஸ்யமான கதைகள் (Recommended) :

கடவுளின் கால்தடம் எங்கே ? | ஆன்மீக சிறுகதை - Devotional Tamil Story

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நெஞ்சை உருக வைக்கும் நட்பு கதை: இரண்டு நண்பர்களின் கதை | Friendship Short Story

அன்று இரவு | Story of a business girl caught at night - Mystery Thriller

நீதி கதைகள் | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள் - Tamil Monk Moral Stories

நகைச்சுவை கதைகள் | வந்தா 5000 போன 50! - Tamil Comedy Short Story

சிறுகதைகள் | விதியை மதியால் வெல்லலாம்! - Tamil Moral Short Story

Tamil blogs | திருடியது யார்? | Short interesting investigation story of 'Who Stole'?

Tamil blogs | கருத்து நிறைந்த திருடன் கதைகள் | Moral thief stories

Tamil blogs | பாவத்தை சுமப்பது யார்? | (Karma's rule) Who is the accused?

புதிர் கதைகள் | இந்த மூன்று வேலைகளைச் செய்ய முடியுமா? - Tamil Clever Short Story

கடத்த போறாங்க! | Kidnap Thriller Suspense Story | விறுவிறுப்பான தமிழ் சிறுகதை