வங்கிக்கே சவால் விட்ட சூப்பர் பாட்டி பகுதி 2 | சுவாரஸ்யமான சிறுகதை!
வணக்கம் நண்பர்களே! வங்கிக்கே சவால் விட்ட சூப்பர் பாட்டி பகுதி 1-ல் பார்வை இழந்த பாட்டி என்பதால் அவரை இழிவாக எண்ணிய மேலாளர், பின்னர் அவரிடம் ஒரு கோடி இருப்பதை அறிந்தவுடன் வாயைப் பிளந்தார். இனி நடப்பவை... மிகவும் சுவாரஸ்யமானவை!
பாட்டிக்குப் பலே மரியாதை!
பாட்டியின் கையில் ஒரு கோடியைக் கண்ட மேலாளர், 'பாட்டி! முதலில் அமருங்கள். யாரு உள்ளது வெளியே பாட்டிக்கு ஒரு ஜூஸ்!' என்று மரியாதையில் மெய் சிலிர்க்க வைத்தார்.
பொறுமையாக அந்தப் பாட்டியிடம், 'இந்த வயதில் அதுவும் பார்வை தெரியாமல் எப்படி உங்களால் இவ்வளவு சம்பாதிக்க முடிந்தது?' என்று ஆர்வமாகக் கேட்டார் மேலாளர்.
'சம்பாதிக்கிறது எல்லாம் ஒரு விஷயமா தம்பி. என்னிடம் உள்ள பணத்தில், இது ஒரு சிறிய தொகையே' என்றார் பாட்டி. 'அப்படி என்ன தான் செய்யுறீங்க?' எனக் கேட்டார் மேலாளர். [பையனுக்கு ஆர்வம் தாங்கவில்லை]
'நான் மற்றவர்களிடம் சவால் விடுவேன். அதில் வென்று சேர்த்த பணம் தான் இவ்வளவு' என்றார் பாட்டி. 'நம்ப முடியவில்லையே' எனச் சந்தேகத்தோடு கேட்டார் மேலாளர்.
ஒரு சவால்!
'சரி! ஒரு சவால். நாளைச் சரியாகப் பத்து மணிக்கு, உன் தலை முடியின்றி மொட்டை ஆகிவிடும். ஆகவில்லை என்றால், 25 லட்சம் உனக்குத் தருகிறேன். மொட்டையாகி விட்டால், 25 லட்சம் நீ எனக்குத் தர வேண்டும் என்ன சவாலா?' என்றார் பாட்டி.
'மொட்டையா'? எனக் கூறியபடி மேலாளர் விழுந்து விழுந்து சிரித்தார், 'வாய்ப்பே இல்லை. சவாலுக்கு நான் தயார்' என்று நம்பிக்கையோடு கூறினார்.
'எனக்கோ பார்வை தெரியாது, நீ என்னை ஏமாற்றினால், நாளைத் தோல்வி அடைந்ததும் வீண் வாக்குவாதம் செய்தால்? எனவே, நாளை ஒரு சிறந்த வழக்கறிஞரோடு காலை 10 மணிக்கு உன்னைச் சந்திக்க வருவேன்' என்றார் பாட்டி.
'வழக்கறிஞரை அழைத்து வாருங்கள் யார் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்' என்று தன் சிரிப்பை அடக்கமுடியாமல் கூறினார் மேலாளர். பதிலுக்குப் பாட்டியும் ஒரு சிறிய புன்னகையோடு 'பார்ப்போம்' என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.
இரவு முழுவதும் மேலாளருக்கு உறக்கம் வரவே இல்லை. கண்ணாடியில் தன் முடியைப் பார்த்துக்கொண்டே இருந்தார். முடியைத் தடவிக் கொண்டே இருந்தார். 'இரவு யாராவது வருவார்களா? தான் தூங்கும்பொழுது மொட்டை அடித்து விடுவார்களா?' என்று பல கேள்விகளோடு அசதியில் சற்று கண் அயர்ந்தார்.
காலையில் எழுந்தவுடன், பயந்தபடி நேராகக் கண்ணாடியை நோக்கி ஓடினார். அவர் தலையில் முடி இருந்தது. அதை அன்போடு தடவிக்கொடுத்து மகிழ்ந்தார். 'தோல்வி அடையப் போகிறாள் மூதாட்டி! 25 லட்சம் எனக்கே!' என்று துள்ளி குதித்து வங்கிக்குப் புறபட்டார்.
வென்றது யார்?
மணி 9.55 மூதாட்டி தன் வழக்கறிஞருடன் மேலாளரைக் காண வந்தார். 'என்ன பாட்டி? இன்னும் ஐந்து நிமிடம் தான் இருக்கிறது. என் தலையில் முடியும் இருக்கிறது. தோல்வியைத் தழுவப் போகிறீர்களா?' என்றார் மேலாளர்.
'அப்படியா தம்பி! முடி இன்னும் தலையில் தான் இருக்கிறதா? உண்மையாகவா? இது எப்படி சாத்தியமாகிற்று? நான் அதைப் பிடித்துப் பார்க்கலாமா? அப்பொழுதுதான் என்னால் உறுதியாக உன் தலை மொட்டை ஆகவில்லை என்று நம்ப முடியும்' என்றார் மூதாட்டி.
'ஒப்புக்கொள்கிறேன் பாட்டி. எப்படியும் தோல்வியைத் தான் அடைய போகிறீர்கள்? நன்றாக என் முடியைப் பிடித்துப் பாருங்கள்' என்றார் மேலாளர். 10 மணி ஆனது, சிரித்துக்கொண்டே மேலாளரின் முடியைக் கையில் பிடித்துப் பார்த்தார் மூதாட்டி.
'என்ன தோற்று விட்டீர்களா?' என்று சிரித்தார் மேலாளர். 'ஆமாம் தம்பி! தோற்றுவிட்டேன்' என்று நமட்டு சிரிப்போடு கூறினார். தோல்வியை மூதாட்டி சிரித்துக்கொண்டே ஏற்றது, மேலாளருக்குச் சற்று குழப்பத்தையும் சந்தேகத்தையும் அளித்தது.
சட்டென அவர் அருகிலிருந்த வழக்கறிஞரின் முகம் மாறியதை கவனித்தார் மேலாளர். சிறிது நேரத்தில் கண்கள் கலங்கிய வழக்கறிஞர், நேராகச் சுவற்றில் தன் தலையை மோத முயன்றார்.
வழக்கறிஞரின் கதை!
'வழக்கறிஞரே! ஏன்? என்ன ஆயிற்று? ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று வியப்போடு கேட்டார் மேலாளர்.
'சார், இந்த மூதாட்டி நேற்று மாலை என் அலுவலகம் வந்தார். அறிவில் தான் தான் சிறந்தவர் என்று வாதிட்டார். இந்த ஊரிலே மிகச்சிறந்த வழக்கறிஞரான நான், அதை ஏற்றுக் கொள்ளவில்லை. யார் அறிவில் சிறந்தவர் என்று அறிந்துகொள்ள ஒரு சின்ன சவாலை ஏற்றுக் கொள்ளும்படி கூறினார்.
அந்த மூதாட்டி, நாளை வலாஜா வங்கியின் தலைமை மேலாளரின் தலை முடி சரியாகப் பத்து மணிக்கு என் கையில் இருக்கும் என்றார். நான் அதற்கு வாய்ப்பே இல்லை. அதுவும் பார்வையில்லாத பாட்டியால் எப்படி முடியும்? என்று எகத்தாளமாக ஏற்றுக்கொண்டேன். இப்பொழுது தோல்வியைத் தழுவி விட்டேன்' எனக் கதறினார்.
'எவ்வளவு பணம் தருவதாகச் சவால் விட்டீர்கள்?' என்று பரிதாபமாகக் கேட்டார் மேலாளர். 'ஒரு கோடி ரூபாய்' என்று நொறுங்கிய இதயத்தோடு பதிலளித்தார் வழக்கறிஞர், 'பார்வை தெரியாத மூதாட்டி தானே என்று ஆணவத்தோடு சற்று அதிகமான தொகையைச் சவால் விட்டு விட்டேன்' என்றபடி கண்கலங்கினார்.
இவை யாவையும் கேட்டுக்கொண்டே சிரித்த நமது சூப்பர் பாட்டி, '25 லட்சம் உனக்குத் தருகிறேன்' என்று மேலாளரிடம் கூறினார். 'ஒரு கோடியை மறக்காமல் இந்த வங்கியில் என் கணக்கில் போட்டு விடுங்கள்' என்று வழக்கறிஞரிடம் கூறிவிட்டு, சிங்க நடை போட்டுச் சென்றார் மூதாட்டி!
அசத்தலான நகைச்சுவை கதை:

கருத்துகள்
கருத்துரையிடுக